Tuesday, December 30, 2008

காதலின் கடைசிக்குறிப்பு..........


இறக்கை கோதிக்கொண்டிருக்கும்
ஓர் வெண்புறாவின் மென்மையென
தடவிப்போகிறாய்- உரசிப்போகும்
குளி்ர்காற்றென உணர்கிறேன் நான்

கூடிக்களித்திருக்கும்
ஓர் குடும்பவிழாவில்- நீ
ரகசியக்குறிப்புகளை வீசிப்போகிறாய்
நான் அவஸ்தையாய் சமாளிக்கிறேன்..

பெரும்மழையின் வேகத்துளிகளாய்
எனக்குள் புகுகிறாய்

சிறு குழந்தையின் புன்சிரிப்பை
ஓவியமாக்க முயற்சிக்கிறாள் தாய்

உலகின் கடைசி காதல் குறிப்பை
எழுதிக்கொண்டிருக்கிறான்-ஓர்
விரல்களிழந்த காதலன்
தீவிரவாதிகளால் சுடப்பட்ட
காதலியின் இரத்தத்தை மையமாக்கி.....

அமைதியாய் விடிகிறது காலை
இன்னுமொரு காதலை பூத்து...
கருத்துப்பிழை சுமந்து வெளிவரும்
அக்காதலின் கடைசிக்குறிப்பு

Thursday, December 11, 2008

காதலில் கவிதையில்லை...


உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்
நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்
நீ காதலைச் சொன்னாய்-
நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்
உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை
காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை
அதுவும் தேவைப்பட்டது-
நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..
நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்
சிறுகுஞ்சாய்....

ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்
பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்
ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து
நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..
நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..

நான் எதி்ர்பார்த்ததைப்போல
என் பலவீனம் உன் பலமாய்
நீ என்னிலிருந்து விலகிப்போனாய்
நான் துடுப்பிழந்த படகானேன்

வெகு நாள் கழித்து
திடீரென ஓர் கவிதை
பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த
மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்
கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....

காதல் எல்லையில்லா பிரபஞ்சம்
கவிதை காதலிலிருந்ததது
காதல் கவிதையில்லை...

Monday, December 1, 2008

காதல் தோல்வியா?


காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்...
காதல்தோல்வியும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்...
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சனைகளை தீர்க்க
பழகிக்கொள்...
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத்துணிகிறாய்?
காதல் புனிதமானதுதான்...
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்.
நண்பா...
காதல் தோல்வியா?
காதலியை வெறுத்திருந்தால்
தேடிச்சென்ற காதலை மறந்து
தேடிவரும் காதலை அணைத்துக்கொள்...
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல காதலையும்
கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...
வாழ்க்கையென்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...!