Wednesday, December 16, 2009

உன் அணைப்பினால் அழகாகிறேன்



மெல்லிய மழைச்சாரல்
ஜன்னல் வழியே தெறிக்க
பின்னிரவின் குளிரில் உன்னை
இறுக்கி அணைத்தபடியே
படுத்திருக்கும் அந்த சுகம்
மரணத்தின் விளிம்பு வரை நீளும் வரம் வேண்டும்.

எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்.

இருவரும் அணைத்தபடி
படுத்திருக்கும் சுகத்தைவிட,
நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
எனக்கு எதிர்புறமாய் திரும்பியபடி
படுத்திருக்கும் நேரத்தில்,

மெதுவாய் உன் பின்னால் இருந்து
அணைத்துக் கொள்ளும் அந்த சுகம்
எனக்கு மிகப் பிடித்தது.
அப்போது மெதுவாய் உன் விரல்கள்
என் விரல்களை
சிறைப்பிடித்துக் கொள்ளும்.

அந்த ஒரு நொடியில்
இதுவரை என்னிடம்
நீ கொண்ட கோபம் எங்கே போயிற்று?
என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை
இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தால் கூட
அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

உனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் காஃபி குடிக்கிறாய்.
எனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் உன்னை
கட்டிப்பிடித்துக் கொள்கிறேன்.

உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன்.

எனக்கு தேவை
உன் முத்தங்கள்தான்.
ஆனால் அதை நேரிடையாக கேட்பதைவிட,
உன் அணைப்பை மட்டும்தான் கேட்பேன்.
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் என்பது போல்,
நீ உன் அணைப்போடு சேர்த்து
உன் முத்தங்களையும்
இலவசமாக தருகிறாய்.

நீ அணைக்கையில்
உன் கழுத்தோரம் மணக்கும்
வாசனைக்கு இணையான பெர்ஃயூம்,
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.

தூக்கத்தைவிட,
கனவுகளைவிட,
உன் அணைப்பையே
அதிகம் விரும்புகிறேன்

நீ மட்டும் என்னை
அணைத்து கொண்டு இருப்பாயேயானால்
ஆயுள் முழுவதும் உன் அருகில்
தூங்கிக்கொண்டு இருப்பேன்.

No comments: